அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “”ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.
ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் “”நேடோ” கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றன.
இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், “”இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்” ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், “”ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக”த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.
வேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச்செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப்போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசியவெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.
ஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர் களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.
மேலும்…….
Filed under: அமெரிக்கா | Tagged: அமெரிக்கா | Leave a comment »
You must be logged in to post a comment.