இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சாரா மாலினி பெரேரா…

சகோதரி சாரா மாலினி பெரேரா (Sister Sarah Malini Perera) பஹ்ரைனில் வாழ்ந்து வருபவர். மூன்று மாத விடுமுறையில் இலங்கை வந்தவர் கடந்த மார்ச் மாதம் இருபதாம் தேதியன்று இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
38 வயதாகும் சகோதரி சாரா புத்தமத பெற்றோர்களுக்கு பிறந்தவர். 1985 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரைனில் வசித்து வருகிறார். “Discover Islam” அமைப்பின் மூலம் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொண்டவர், 1999 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவினார். இவரது பெற்றோரும் நான்கு சகோதரிகளும் பின்னர் வெவ்வேறு காலக்கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…
மூன்று மாத விடுமுறைக்காக இலங்கை வந்தவர், தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சிங்கள மொழியில் எழுதியிருந்த இரண்டு நூல்களை வெளியிட்டார்.
அவை, “From Darkness to Light” மற்றும் “Questions and Answers” என்பதாகும். இந்த நூல்களில் புத்தரைப் பற்றி மனதை புண்படுத்தும் கருத்துக்கள் (Offensive to Buddha) இருப்பதாக புத்தமத அடிப்படைவாத கட்சியான  JHU (Jethika Hela Urumaiya) கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் சகோதரி சாரா கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது பற்றி காவல்துறை எந்த ஒரு தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது. தற்போது முப்பது நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் சகோதரி சாரா மாலினி.
தன்னுடைய இந்த புத்தகங்களை கார்கோ மூலம் பஹ்ரைனுக்கு அனுப்பும் போது தான் கைது செய்யப்பட்டதாக அவருடைய மூத்த சகோதரி மர்யமும் அவரது குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.
அந்த புத்தகங்களை அனுப்பும் பொறுப்பை  ஏற்றுக்கொண்ட நிறுவனத்துக்கும் புத்தமத கட்சியான JHU (Jethika Hela Urumaiya) விற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் சகோதரி சாராவை கைது செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதில்

பின்னூட்டமொன்றை இடுக